எதிர்கால சந்ததியினருக்கான கல்வித்திட்டத்தை வகுப்பதே அரசின் குறிக்கோள் – ஜனாதிபதி

Kotta
Kotta

எதிர்கால சந்ததியினர் கல்வியில் கைவிடப்படாமல் இருப்பதற்காக முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் திட்டமொன்றை தயாரித்து செயற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்பள்ளி கல்வி தொடர்பாக இதுவரையில் உரிய அவதானங்களோ, ஒழுங்குவிதிகளோ இருக்கவில்லை எனவும் அதனால் சிறுவர் கல்வி தொடர்பான நிபுணர்களின் ஒத்துழைப்புடன் முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தெளிவான மனதுடன் கல்வியை பெற்றுக்கொள்ளும் பின்புலத்தை பிள்ளைக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் பிள்ளைகளை தொடர்ச்சியாக பாராட்டுதல் பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பணம் அறவிடப்படாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்குதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து பாடசாலைகளினதும் குடிநீர் மற்றும் சுகாதார தேவைகளை குறுகிய காலத்தில் நிறைவு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.