மாரவில – தொடுவாவ பிரதேசத்தில் பெண்ணொருவர் மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (21) இடம்பெற்றதோடு சம்பவத்தில் 74 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது குறித்த வீட்டில் மூன்று சிறிய குழந்தைகளும் இறந்த பெண்ணின் மகன் மற்றும் மருமகளும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற போது அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததாகவும், கண் விழித்து பார்க்கும் போது தனது தாய் தீப்பிடித்து அலறிக்கொண்டிருந்ததாகவும்; உடனடியாக தண்ணீர் எடுத்து ஊற்றி அணைக்க முயன்றதாகவும் உயிரிழந்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாரவில மேலதிக நீதிவான் ஹேஷாந்த டி சில்வா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
குறித்த பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.