மஸ்கெலியாவில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சிறுத்தை சடலமாக மீட்பு!

தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிறுத்தை புலியொன்றின் சடலம் மஸ்கெலியா ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தின் பாடசாலைக்கு மேல் பகுதியில் சிறுத்தை புலியொன்றின் சடலமொன்று உள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் சிலரால் நல்லதன்னி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டது.

ஆறு வயதுடைய புலியின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்பட்டதாக நல்லதன்னி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.