தொழில் அற்ற இளைஞர், யுவதிகளுக்காக விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசு நடவடிக்கை!

snapshot331
snapshot331

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்வி கற்று மேற்படிப்புக்கு செல்ல முடியாத நிலையில் தொழில் வாய்ப்புக்காக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தின் முதற்கட்டமாக தொழில் வாய்ப்பு உத்திகளுக்கான விமான போக்குவரத்து கல்லூரியின் மையத்தினை அமைப்பது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது, இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவிகையில்;

முதற் தடவையாக தமிழ் இளைஞர்களுக்கான இந்த கல்லூரியினை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மை காலத்தில் கொரோணா தொற்று காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் அவற்றிற்கான சேவை துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு அதநூடாக தமிழ்மொழி தெரிந்தவர்களும் தொழில்வாய்ப்புக்காக இணைக்கப்படவுள்ளனர்.

இந்த கல்லூரியின் கட்டிட நிர்மாணப் பணிகள் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டன.

எனவே தமிழ் தெரிந்த மாணவர்களையும் உள்ளீர்க்க இந்த அரிய சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்து இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல்; யாழ் சர்வதேச விமான போக்குவரத்தின் கடந்தகால நடவடிக்கைகளை கண்டறிதல், வட மாகாணத்தின் இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியினை எந்த இடத்தில் நிர்மாணிப்பது மற்றும் கல்லூரியில் கற்றல் பாடத்திட்டங்களுக்கான தொழில் வாய்ப்புக்களாக கல்லூரி கண்காணிப்பு தொழிலாளர்கள், இளைகலை அபிவிருத்தி பாடத்திட்டம், நிர்வாக அலகுக்கான உத்தியோகத்தர்கள், விமானநிலை தொழிலாளர்கள் போன்ற பாடகொள்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.

இவ் உயர்மட்ட சந்திப்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியின் உயர் அதிகாரிகள், மற்றும் தொழில் துறைசார்ந்த கல்லூரியின் விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.