வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி; படுகொலை எனப் பரிசோதனையில் உறுதி!

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த மாணவியின் மரணம் கொலைச் சம்பவம் எனப் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட – பின்னவலவத்த பிரதேசத்தில் குறித்த பாடசாலை மாணவி (வயது – 16) வீட்டில் சடலம் மீட்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் குறித்த மாணவி மட்டுமே இருந்துள்ள நிலையில் அப்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.