தமிழ்த் தேசிய ஒன்றிணைந்த கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக நாளைய தினம் (திங்கட்கிழமை 28/09/2020 ) வடக்கு,கிழக்கு தாயகம் தழுவிய கதவடைப்பு (ஹர்தால்) போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு தமிழர் உரிமைகளுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த லெப். கேணல் திலீபனை நினைவு கூருவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில்,தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே வடக்கு,கிழக்கு தாயகம் தழுவிய கதவடைப்பு (ஹர்தால்) போராட்டமொன்றும் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.