சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அலி சப்றி

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட எண்ணவில்லை. அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படும்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு செல்வதாகும்.

விரைவான பொருளாதார அபிவிருத்தியை பெற்றுக்கொள்வது இதன் அடிப்படை நோக்கம் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்கு ஏதுவாக அமைந்த எந்த விடயங்களும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குள் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரான அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.