20வது திருத்தம் பிரதமரின் அதிகாரத்தை குறைக்காது – மஹிந்த திட்டவட்டம்

அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவு பிரதமருக்கான அதிகாரத்தைக் குறைக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று காலை ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சியினருக்குள் எந்தக் குழப்பமும் இல்லை எனவும், அவர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றனர் எனவும் பிரதமர் மஹிந்த இதன்போது குறிப்பிட்டார்.

20வது திருத்தம் தொடர்பில் எதிரணியினர் தப்புக்கணக்குப் போடுகின்றனர் எனவும், அவர்களின் எண்ணங்கள் எதுவும் நிறைவேறமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20வது திருத்த வரைவு நிறைவேற்றப்படும் எனவும் அவர் திடமான நம்பிக்கை வெளியிட்டார்.

எனினும், 20வது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அந்தத் தீர்ப்பை நாம் உட்பட அனைத்துத் தரப்பினரும் தலைவணங்கி ஏற்கத்தான் வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.