பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல முடியாது

Sajith
Sajith

பொதுமக்களின் வரிப் பணத்தில் அரசியல்வாதிகள் வௌிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அவ்வாறு செல்வதாயின் பொது மக்களின் நலனுக்காக மட்டுமே தனது ஆட்சியின் கீழ் அமைச்சர்களுக்கு வௌிநாடு செல்ல முடியும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (31) பிற்பகல் நுகேகொட நகரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற வேளையில் அமைச்சர்களின் வாகனங்களும் மாற்றமடைகின்றது. ஆனால் புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்குவது முழுவதுமாக நிறுத்தப்படும்.

வரி பணத்தை கொண்டு இந்நாட்டின் பாடசாலைகள், வைத்தியசாலை அமைப்பை மேம்படுத்த எமக்கு முடியாதா?

கோட்டை பகுதியில் வீடுகளுக்கு பாரிய கேள்வி நிலவுகின்ற நிலையில் இவ்வாறு வீணாகும் பணத்தை கொண்டு அவர்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும் எனவும் வீடொன்று இல்லை என கூறுவது தனக்கு இந்த பூமியில் உரிமை இல்லை என்பதாகும் என தெரிவித்துள்ளார்.

16 ஆம் திகதிக்கு பிறகு அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கை நிறைவடையும்.

நாட்டின் வரிப் பணத்தில் அரசியல்வாதிகள் வௌிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டால், மீண்டும் வரும்போது அங்கிருந்து ஏதாவது ஒரு வளத்தை நாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

குறித்த சுற்றுப்பயணத்தில் ஏதாவது பலன் இருந்தால் மாத்திரமே மீண்டும் பொதுமக்களின் வரிப்பணத்தில் அவர்கள் வௌிநாடு செல்ல முடியும் என்றார்.