ஆறு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஊர்வலத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்கள்,
தமிழ் மக்கள் பல்வேறு விதத்திலும் ஒடுக்கபட்டு வருகின்றனர். அத்துடன் இந்து மதத்திற்கும் இழுக்கு ஏற்பட்டுத்தப்படும் இந்த சூழலில், முன்னெடுக்கப்படவுள்ள குறித்த ஊர்வலத்திற்கு தமிழர்கள் என்ற ரீதியில் நாம் ஒற்றுமையாக அணிதிரள வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதேவேளை இப்பேரணியானது நாளை காலை 08.00 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக புகையிரத நிலைய வீதியை அடைந்து மணிக்கூட்டு கோபுர சந்தியூடாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை அடைந்து அங்கிருந்து வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது .