முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மல்லாவி மத்திய கல்லூரியில் கடந்த 14 வருடங்களாக கடமையாற்றும் அதிபர் தன்னிச்சையாக செயற்படுவதுடன் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் அனுமதியின்றி விடுதிகளில் தன்னிச்சையாக பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றார் .
இவ்வருடம் இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அதிபர் தடையாக இருக்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை பழைய மாணவர் சங்க செயலாளர் முன்வைத்துள்ளனர் .
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது ,
பழைய மாணவர்கள் சங்கத்தின் செயற்பாடுகளை முடக்கி பழைய மாணவர்கள் நிர்வாகத் தெரிவு அதிபரால் ஒழுங்குபடுத்ததுவதற்கு தடைகளை ஏற்படுத்தி பாடசாலையின் அபிவிருத்தியில் பழைய மாணவர்களின் பங்களிப்புக்களை புறம் தள்ளி அதிபர் தன்னிச்சையாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் .
இவ்வருடம் 21.01.2020 அன்று இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திச்சங்கக்கூட்டம் அபிவிருத்திச்சங்க சுற்றறிக்கைக்கு அமைவாக இடம்பெறவில்லை என்று தெரிவித்து துணுக்காய் கல்வி வலயத்தினால் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் கலைக்கப்பட்டு பின்னர் மறுபடியும் புதிதாக பாடசாலை அபிவிருத்திச்சங்கம் கடந்த மாதம் 10.09.2020 அன்று தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் கடந்த ஒரு மாதகாலமாக பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தை கூட்டுவதற்கும் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தைக் கூட்டுவதற்கும் பழைய மாணவர்கள் நிர்வாக தெரிவை மேற்கொள்வதற்கும் அதிபர் தயக்கம் காட்டிவருகின்றார் .
எம்மால் வழங்கப்பட்ட கடிதத்திற்கு பதில் வழங்கப்படவில்லை அத்துடன் அபிவிருத்திச்சங்க சுற்றறிக்கைகளுக்கு அமைவாக செயற்படுவதற்கும் அதிபர் பழைய மாணவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தி வருகின்றார் . பாடசாலையில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப்பணிகளில் தன்னிச்சையாக அபிவிருத்திச்சங்கம் பழைய மாணவர் சங்கத்தின் அனுமதியின்றி பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார் . ஒரு தேசிய பாடசாலையில் கடந்த 14 வருடங்களாக தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றார் .
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் சுற்றறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதிபர் பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தலைவர் என்ற ரீதியில் பழைய மாணவர்களாக எங்களையும் இணைத்து செயற்படுவதற்கு தயக்கம் காட்டிவருகின்றார் .
எனவே இவற்றை நிவர்த்தி செய்து எமது பாடசாலையில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளுக்கு பழைய மாணவர்களையும் ஒருங்கிணைத்து பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தையும் பழைய மாணவர் சங்கத்தையும் செயற்படுவதற்கு அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.