மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சத்துருக்கொண்டான் பகுதியில் கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் மோதியதில் மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளதுடன் காரை செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், தன்னாமுனை விபுலானந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஞானசிங்கம் ஜீவானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் பகுதில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரும் மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் பகுதிக்கு பயணித்த மோட்டார்சைக்கிளும் சம்பவதினமான நேற்று (04) இரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் இவரின் சகோதரர் இதே இடத்தில் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

காரை ஒட்டிச் சென்றவரை கைது செய்து இன்று (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜரர்படுத்தியபோது இவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.