இலங்கையை விளையாட்டு மைதானமாக நினைக்கக் கூடாது! ஜயநாத் கொலம்பகே

இலங்கை பூகோள அரசியல் சக்திகளுக்கான உதைபந்தாட்ட மைதானமாக விளங்க முடியாது என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தை கருத்தில் கொண்டு பூகோள அரசியல் சக்திகள் அதனை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு அனுமதிக்கமுடியாது. அந்த போட்டியில் ஆகக்குறைந்தது நாங்கள் நடுவராகவாவது இருக்கவேண்டும்.

இந்த விளையாட்டில் சர்வதேசஅளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை உள்வாங்கவேண்டிய தேவையுள்ளது. தேசிய நலன்களை அடிப்படையாக கொண்ட கடல்சார் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

பூகோள அரசியல் சக்திகள் இந்து சமுத்திரத்தை விசேடமாக கருத்தில்கொண்ட தங்கள் சொந்த கடல்சார் கொள்கைகளையும், நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டுள்ளன. இலங்கை பூகோள அரசியல் மற்றும் பொருளாதார மூலோபாய அமைவிடத்தில் உள்ளபோதிலும் அதனிடம் அவ்வாறான உறுதியான கொள்கையில்லை.

இலங்கை தனது சொந்த கடல்சார் கொள்கையை உருவாக்க முயல்கின்றது. இலங்கையை ஒரு சாதனமாக பயன்படுத்தி பூகோள அரசியல் சக்திகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதற்கும் இலங்கையை விளையாட்டு மைதானமாக பயன்படுத்துவதற்கும் அனுமதிக்க கூடாது என்றார்.