வடக்கில் தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் ஜி.சீ.ஈ. உயர்தரம் ஆகிய பரீட்சைகள் நடைபெறும் பரீட்சை நிலையங்கள் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபைகளின் கண்காணிப்பின் கீழ் இந்தத் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, பூரண சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில் பரீட்சைகளை நடத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 39 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 555 மாணவர்கள் தோற்றவுள்ளார்கள். இதில் மினுவாங்கொடையிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 07 மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” – என்றார்.