வவுனியா பிரதேச செயலகத்திற்குள் செல்வதற்கு முன் கை கழுவுவதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் பல்வேறு தாமதங்கள் ஏற்படுகின்றது. எனவே பிரதேச செயலகத்தில் கைகழுவும் தொட்டிகள் அமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் போது ,
வவுனியா பிரதேச செயலகத்திற்கு இன்று தமது சேவைகளை பெற்றுக்கொள்ள சென்ற போது பிரதான வாசலில் வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு கைகழுவும் பகுதி ஒதுக்கப்பட்டு அங்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் இதனால் பல்வேறு கிராமங்களிலிருந்து வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாள் ஒன்றிற்கு நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது சேவைகளுக்காக பிரதேச செயலகத்தை நோக்கி செல்கின்றனர் . தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவ் அறிவுறுத்தல்களை பின்பற்றி பிரதேச செயலகத்திற்குள் செல்வதற்கு சமூக இடைவெளி , கைகழுவுதல் , முககவசம் அணிதல் போன்ற நடைமுறைகைள் அவதானிக்கவும் செயற்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் வவுனியா பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்படவில்லை .
பிரதேச செயலகத்தினால் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை . இதனால் மக்கள் மத்தியில் சமூகத் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியாமல் போயுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.