யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் குருதித்தட்டுப்பாடு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளின் குருதிவங்கிகளில் குருதி வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குருதி வங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சுகாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும் குருதித்தான முகாம்கள் பிற்போடப்பட்டமையே குருதித்தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளின் குருதி வங்கிகளுக்கு குருதிக் கொடையாளர்கள் நேரடியாக வருகை தந்து குருதித்தானம் வழங்க முடியும்.

அந்தவகையில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தற்போது நடைமுறையிலுள்ள கொரோனா கால சுகாதார நடைமுறைகளுக்கமைய குருதிக் கொடையாளர்கள் குருதித்தானம் வழங்க முடியும்.

தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு குருதித்தானம் முகாம்களின் ஒழுங்கமைப்பாளர்கள் குருதிக் கொடையாளர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும். மேலதிக விபரங்களிற்கு 0772988917 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ள முடியும் என்றார்.