ஜனாதிபதித் தேர்தலை மேற்பார்வை செய்வதற்காகவும் தேர்தல் காலங்களில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் நாடளாவிய ரீதியில் 71 சிறிய கண்காணிப்புக் கமராக்களை பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தவுள்ளது.
தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக, மேற்படி 71 சிறிய கமராக்களும், 321 ஜெக்கற்றுக்களும் ‘பெப்ரல்’, ‘கபே’ ஆகிய உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸ் திணைக்களத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேர்தல் காலங்களில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகள், ஊர்வலங்கள் என்பவற்றை ஔிப்பதிவு செய்யக்கூடியதாக இருக்கும்.
இக்கமராக்களை வழங்குவதற்காக, நாடு முழுவதிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதனைப் பயன்படுத்தும் முறை தொடர்பில் விளக்கமளிக்கும் பயிற்சிப்பட்டறை ஒன்றும் கொழும்பில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.