கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு பூட்டு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 8

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பகுதியில் உள்ள விடுதிகளில் துப்புரவு வசதிகள் இல்லாதது இப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

இந்த விடுதிகளில் சுமார் 100 முதல் 150 பெண் ஊழியர்கள் இருந்தாலும், அவர்கள் துப்பரவுக்காக மூன்று அல்லது நான்கு கழிப்பறைகள் மட்டுமே வைத்திருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பாஹா மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரப் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 79 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கம்பாஹா மாவட்டத்தில் இதுவரை கொரானாவினால் பதிக்கப்பட்டவர்களின் தொகை 1,483 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக மண்டலம் மற்றும் பிற தொழிற்சாலைகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 30 பேர் காட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், மீதமுள்ள இருவர் வலயத்திற்கு வெளியே உள்ள தொழிற்சாலைகளிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கட்டுநாயக்க சுதந்திர வரத்தக வலயத்தில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 152 ஆகவும், வலயத்திற்கு வெளியே உள்ள தொழிற்சாலைகளில் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆகவும் உள்ளதாகவும் கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கட்டுநாயக்க, சீதுவ பொது சுகாதார மருத்துவப் பிரிவில் நேற்று நடத்தப்பட்ட 820 பி.சி.ஆர் சோதனைகளில், 450 முடிவுகள் வெளிவந்துள்ளன.

அவற்றில் 47 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீதுவ பொது சுகாதார மருத்துவப் பிரிவின் சுகாதார ஆய்வாளர் சுரேஷ் குமாரா தெரிவித்தார்.

அதன்படி, இந்த நோயாளிகளை மேலதிக வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.