கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் மருத்துவ நிபுணர்!

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரஸ் கையடக்க தொலைபேசி, பேனை, இரும்பு போன்றவற்றில் அதிக காலம் உயிருடன் இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் ஆயுட் காலம் தொடர்பில் வினவியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் மூன்று வாரத்திற்குள் குணமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து உடலுக்கு உடல் வேறுபடுகிறது.

எப்படியிருப்பினும் கொரோனாவுக்கு உறுதியான மருந்து அல்லது தடுப்பூசி இல்லாத போதிலும் எங்கள் சுகாதார பிரிவுகளினால், நோயாளிகளின் நோய் அறிகுறிக்கமைய சிகிச்சையளித்து குணமாக்க முடியும்.

உதாரணமாக இருமல் உள்ள கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டால் அவரது நோய் அறிகுறிக்கமைய சிகிச்சையளித்து அவரை குணப்படுத்தக்கூடிய சக்தி எங்கள் வைத்தியர்களிடம் உள்ளது.

விசேடமான இந்த கொரோனா வைரஸ், இருமல், தும்மலின் போது பரவுகின்றது. மேலும் யாராவது ஒருவரின் எச்சில் பட்ட இடத்தில் நின்றால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.

நீங்கள் பெண் என்றால், இந்த நாட்களில் புடவை அணிந்து பணிக்குச்செல்ல வேண்டாம். புடவையின் முந்தானை கீழே படக்கூடும். இதன் மூலம் எச்சில் பட்டு கொரோனா தொற்றக்கூடும்.

அதனால் அவதானமாக பணிக்கு செல்ல வேண்டும். அத்துடன் தேவையற்ற ஆபரணங்கள் அணிவதனை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.