மன்னார் பகுதியில் காவல்துறை வாகனம் மோதி சிறுமி உட்பட மூவர் காயம்!

மன்னார் பஸார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று (20) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த காவல்துறையினரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய கணவன், மனைவி மற்றும் அவர்களுடன் வருகை தந்த 6 வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி, போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த காவல்துறை சாரதியிடம் மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.