மாஸ் ஆடைத்தொழிற்சாலை ஊழியருக்கும் கொரோனா தொற்று உறுதி!

கம்பஹா பியகமவில் உள்ள மாஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுறுதியான நபருடன் தொடர்புடையவர் என்பதால் அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் தம்பதெனிய ஆசிரியர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கு கொரோனாவின் அறிகுறிகள் காணப்பட்டதால் சிகிச்சைக்காக கடந்த 21 ஆம் திகதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (23) உறுதி செய்யப்பட்டது. ஆகவே மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.