வவுனியா நெடுங்கேணி பகுதியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா

வவுனியா, நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த தொற்றாறர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் பிரபல கட்டட நிர்மாண நிறுவனமொன்றின் ஊடாக வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஏழு பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரோனா பரிசோதனை செய்தபோது மூவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இருவருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதில் ஏழு பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 12ஆக உயர்ந்துள்ளது.