வெற்றுப் பொருட்களின் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்!

பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்று கார்பன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள் சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்காக தயாரிக்கப்பட்ட முதலாவது கொள்கலன் கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம் “நாம் வளம்பெற்று நாட்டை வளப்படுத்துவோம்“ என பெயரிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு பாடசலைகளில் இருந்து ஒதுக்கப்படும் கார்பன் பேனா குழாய்கள் சுமார் 80 கிலோ கிராம்களாகும். வருடமொன்றுக்கு 29000 கிலோவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து ஒதுக்கப்படும் அளவு இதுவரையில் கணக்கிடப்படவில்லை.

பாவனையின் பின்னர் ஒதுக்கப்படும் பேனா மற்றும் பற் தூரிகைகள் உக்குவதற்கு 100 முதல் 500 வருடங்கள் செல்வதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட கொள்கலன்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ”வெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிளாஸ்டிக்” நிறுவனம் இவற்றை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தை அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.