யார் எதிர்த்தாலும் கொழும்பு மாநகரசபையின் கூட்டத்தை நடத்தியே ஆகுவோம்-மேயர் ரோசி!

Rosy2
Rosy2

யார் எதிர்த்தாலும் கொழும்பு மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தை நாளை நடத்தியே ஆகுவோம் என கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் இருக்கும் பிரதேசங்களில் கொழும்பு மாநகரசபை எல்லைப்பிரதேசம் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக மாநகரசபை பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான சர்மிலா கோணவள மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று மாநகர எல்லைக்குள் பாரியளவில் பரவி இருக்கின்றது.

மாநகரசபையின் சுகாதார துறையில் பணிபுரியும் ஊழியர்களும் இந்த தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை 29ஆம் திகதி இடம்பெற இருக்கும் மாநகரசபையின் சபை அமர்வை வேறு தினத்துக்கு பிற்போடுமாறு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு நகரில் தற்போது உக்கிரமடைந்துள்ள கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு மாநகரசபை கூட்டத்தை நடத்த தேவையில்லை என மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு அறிவுறுத்தியதாக கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பாக ரோசி சேனாநாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிதி சட்டமூலங்கள் பலவற்றை அனுமதித்துக்கொள்ளவும் மாநகரில் வாழும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்குடன் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவதற்காக நாளை இடம்பெறும் மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தை நடத்தியாகவேண்டும்.

அதனால் யார் எதிர்த்தாலும் கொழும்பு மாநகரசபை மாதாந்த கூட்டத்தை நடத்தியே ஆகுவோம் என தெரிவித்துள்ளார்.