ஆய்வுகூட வசதிகள் இன்மையால் 10,000 பி.சி.ஆர் முடிவுகள் வெளியிட முடியாத நிலை!

போதியளவு ஆய்வுகூட வசதிகள் இல்லாத காரணமாக கொரோனா நோயாளிகள் என சந்தேகிக்கப்பட்ட பத்தாயிரம் பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு மருத்துவமனைகள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளதால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துரதிஸ்ட நிலை காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் 2145 மாதிரிகளும், அனுராதபுரம் வைத்தியசாலையில் 1500 மாதிரிகளும் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 1800 பி.சி.ஆர் மாதிரிகளும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தில் 4500 மாதிரிகளும் குவிந்து கிடக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் குளிரூட்டல் வசதிகள் பி.சி.ஆர் மாதிரிகளை வைத்திருப்பதற்கு போதுமானவையல்ல எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக நாளாந்தம் பெறப்படும் மாதிரிகளை மருத்துவமனையின் வேறொரு அறையில் சேமிக்கவேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் பணியாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், பி.சி.ஆர் மாதிரிகளை ஆராயவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெருமளவானவர்கள் கொரோனா வைரசின் பிடியில் சிக்கும் ஆபத்தை தவிர்க்கவேண்டும் என்றால் அரசாங்கம் மருத்துவமனைகளில் பி.சி.ஆர் மாதிரிகளை ஆராய்வதற்கான வசதிகளை உடனடியாக அதிகரிக்கவேண்டும் என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.