கொழும்பு மாவட்டம் உள்ளடங்களாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் எவ்வாறு நீக்கப்படும் என்பது குறித்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று மேல் மாகாணத்தில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாரமாக கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆபத்து நிலைமைகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், முன்னதாக அறிவிக்கப்பட்டது போன்று நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் திங்கட்கிழமை அதிகாலை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.