ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று தனக்கு ஆதரவான வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து, வாக்காளர்களை அச்சுறுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ வேண்டாம் என சகல வேட்பாளர்களையும், அவர்களது கட்சி ஆதரவாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது.
அவ்வாறு தவிர்ந்து கொள்ளாவிடின் குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்தவுடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸாரைக் கோரியுள்ளதாகவும், முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடாவடித்தனம் புரிந்து தமது வேட்பாளருக்கு ஆதரவு பெற்றுக் கொள்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் அவ்வாறு இடம்பெற்றால், கட்சி பேதம் பாராமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஆணைக்குழு தலைவர் எச்சரித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் தினத்தில் வாக்காளர்களுக்கோ, கட்சி ஆதரவாளர்களுக்கோ மதுபானம் வாங்கிக் கொடுக்க வேண்டாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் வேட்பாளர்களிடமும், அரசியல்வாதிகளிடமும் மேலும் கோரியுள்ளார்.