யாழ். மாநகர எல்லைக்குள் இன்று 11 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளருடன் தொடர்புகளைக் கொண்டிருந்த 11 பேரிடம் இருந்து இன்று காலை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிகளின் பெறுபேறு இன்று இரவு கிடைக்கும் என்று யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, யாழ். நகரில் உள்ள மீன் சந்தைகளில் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பேலியகொட மீன் சந்தையைத் தொடர்ந்து திருகோணமலை மீன் சந்தையில் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் சிலர் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டதாலும், நுகர்வோர் இது தொடர்பில்  அச்சம் கொள்வதைத் தடுக்கும் நோக்கிலுமே பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குருநகர், பாசையூர், சின்னக்கடை, நாவாந்துறை, கல்வியங்காடு உள்ளிட்ட 6 அங்காடிகளில் இருந்தும் தலா 5 பேர் வீதம் சோதனை மேற் கொண்டபோதும் இவர்களின் பெறுபேறு இதுவரை வெளிவராத போதும் அவை இன்று வெளிவருவதிலும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.