நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு மஹாசங்கத்தினரிடம் பிரதமர் வேண்டுகோள்!

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி, நாட்டின் அனைத்து விகாரைகளிலும் ரதன சூத்திரம் பாராயணம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மஹாசங்கத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இதுவரை இலங்கை மாத்திரமன்றி முழு உலகமும் பாரிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

இவ்வாறான சூழலில் கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டு உலக வாழ் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு பிரார்த்தித்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு விகாரைகளில் ஏற்கனவே ரதன சூத்திரம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நெருக்கடி நிலைக்கு மத்தியில் நாட்டின் அனைத்து விகாரைகளிலும், தினமும் ரதன சூத்திரம் பாராயணம் செய்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசிர்வாதமும், பாதுகாப்பும் கிடைப்பதற்கு பிரார்த்திக்குமாறு பிரதமர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இந்து ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறும் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.