சுகாதார அமைச்சர் பதவி விலகவேண்டும் என மக்கள் வேண்டுகோள் – ஹரீன் பெர்ணான்டோ

சுகாதார அமைச்சும் அரசாங்கமும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விடயத்தில் தோல்வியடைந்துள்ளமை வெளிப்படையாக தெரிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஓக்டோபர் 04ஆம் திகதி மினுவாங்கொட தொற்று குறித்து தெரியவந்ததும் அரசாங்கம் முடக்கல் நிலையை அறிவித்திருந்தால் தற்போதைய நெருக்கடியான நிலையை தவிர்த்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 20வது திருத்தத்திற்கு முன்னுரிமை வழங்கிய அரசாங்கம் 22ம் திகதி வரை நாட்டை திறந்து வைத்திருந்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த வாரம் இராணுவ தளபதி திங்கட்கிழமை அதிகாலை ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக மக்கள் மூன்று நாட்களுக்கு தேவையான பொருட்களையே வைத்திருந்தனர். தற்போது ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சிரமப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.