வைத்தியரின் ஏ.ரி.எம். காட்டை திருடி மதுபானம் வாங்கி மகிழ்ந்தவருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் காட்டை திருடி மதுபானக்கடையில் 20 ஆயிரம் ரூபாவுக்கு ‘பியர்’ வாங்கி அருந்திய 40 வயதுடைய ஒருவரை 14 நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் உத்தரவிட்டார்.

நேற்று திங்கட்கிழமை (02) நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வைத்தியர் தனியார் வங்கி ஒன்றின் ஏ.ரி.எம். காட்டை பயன்படுத்தி அவரது சம்பளத்தை பெற்றுவந்துள்ள நிலையில் குறித்த ஏ.ரி.எம். காட் காணாமல் போயுள்ள நிலையில் மதுபானக்கடை இரண்டில் 20 ஆயிரம் ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவரின் வங்கி கணக்கில் பணம் கழிக்கப்பட்டு அவரின் கையடக்க தொலைபேசிக்கு வங்கியின் குறுந்தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினருக்கு கொடுத்த முறைப்பாட்டையடுத்து காவல்துறையினர் மதுபானக்கடைகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விசாரணையில் மட்டக்களப்பு 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் வைத்தியரின் ஏ.ரி.எம். காட்டை வழங்கி ஒரு கடையில் 10 ஆயிரம் ரூபாவுக்கு பியரும் இன்னொரு கடையில் 10 ஆயிரம் ரூபாவுக்கு மதுபானங்களையும் கொள்வனவு செய்துள்ள நபரை கண்டுபிடித்து அவரை ஞாயிற்றுக் கிழமை (01) கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் .