முஸ்லிம்களின் வழிகாட்டியான இறுதித் தூதர் முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாட்டின் முக்கிய தலைவர்களும், ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டு வருகின்றனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துக்களின் தொகுப்புக்களாவன:
தொழிலாளர்களின் வியர்வை காயும் முன்னரே அவர்களது ஊதியத்தைக் கொடுத்துவிடும் படி போதித்த நபிகளின் போதனை முழு உலகுக்கும் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிளவுபட்டிருந்த அரேபிய மக்களை சகோதரத்துவம், சமாதானம், தியாகம் என்ற பண்புகளினால் ஒற்றுமைப்படுத்தி அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்பிய நபியவர்களின் முயற்சி இன்று எமக்கான முன்மாதிரியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புனித இஸ்லாம் மார்க்கம் உலகம் முழுவதும் பரவிச் செல்வதற்கு நபியவர்களின் பாரிய முயற்சியே காரணமாகும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல மக்களுடனும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் நபிகள் நாயகம் பிறந்த தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.