மருந்துகளை தபால் மூலம் வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு தீர்மானம்!

அரச வைத்தியசாலை சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோயின் பரவல் காரணமாக தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துகளை கிரமமாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதனைத் தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து காவல்துறையின் உதவியுடன் அரச வைத்தியசாலைகளில் பதிவுசெய்துள்ள தொற்றா நோயாளர்களுக்கான மருந்து வகைகளை தபால் திணைக்களத்தின் உதவியுடன் அவர்களது வீட்டிற்கு கொண்டு சென்று வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

எனவே, வடமாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளின் சிகிச்சை நிலையங்களில் தொற்றா நோய்களுக்காக சிகிச்சை பெறுகின்ற நோயாளர்கள் தங்களுக்குரிய வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அவர்களுடைய சரியான பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பதிவு செய்யப்பட்ட சிகிச்சை நிலைய இலக்கம் (கிளினிக் இலக்கம்) என்பவற்றை அறிவித்து தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளுக்குமுரிய தொலைபேசி இலக்கங்களை பின்வரும் வழிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

  1. வடமாகாணசுகாதாரத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம் 021 222 6666
  2. வடமாகாணசபையின் இணையத்தளம் www.np.gov.lk
  3. வடமாகாணசுகாதாரத் திணைக்களத்தின் முகநூல் (முகவரிCOVID 19, PDHS, NP)

குறிப்பு: மேற் குறிப்பிட்ட வழிமுறைகளிநூடாக தங்களுடைய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏதாவது சிரமங்கள் ஏற்படின் அவசர தொலைபேசி இலக்கத்துடன் (021 222 6666) தொடர்புகொள்ளவும்.

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.