விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மென்டிஸ்க்கு பிணை வழங்கி பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு பாணந்துறை – ஹொரேதுடுவ பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் குசல் மென்டிஸ் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குசல் மென்டிஸ் பயணித்த வாகனத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் அவிஸ்க பெர்ணாண்டோவும் உடன் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.