கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை – த.சத்தியமூர்த்தி

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (05) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கீழ் யாழ்.கோப்பாயில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கான விசேட சிகிச்சை நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை தென் பகுதியைச் சேர்ந்த 18 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்திலிருந்து அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கோப்பாய் விசேட சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தில் எமது வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் அடங்கலாக அனைத்து உத்தியோகத்தர்களும் சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விசேட வைத்திய சாலையில் 350 பேருக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் நிலையாக சாதாரணமாக தொற்றுக்குள்ளானவர்கள் வேறு எந்த பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு கிழமைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தமது வீகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

இதே சமயம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் சில கட்டிடங்களில் மாத்திரமே தங்கியிருக்கின்ற வசதியுள்ள கட்டடங்கள் மாத்திரமே வைத்தியசாலை தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது ஏனைய கட்டடங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது அதனை இலகுபடுத்துவதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதுதவிர கோப்பாய் பிரதேசத்தில் உள்ள மக்கள் எந்தவித பயபீதி அடையத் தேவையில்லை. ஏனெனில் நோயாளர்கள் சரியான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து வெளியேறும் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டு தெல்லிப்பளையில் எரியூட்டப்படுகிறது.

எனவே, சமுதாயத்திற்கோ அல்லது அப்பகுதி மக்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக யாழ். போதனாவைத்தியசாலை வைத்தியர்கள் பலர் மிக அவதானமான முறையில் அவர்கள் சுய பாதுகாப்பு அங்கிகள் அணிந்து சேவையை வழங்கி வருகின்றார்கள்.

ஆகவே, பொதுமக்கள் அருகில் இருப்பவர்கள் இது தொடர்பில் பயப்பீதி அடையத்தேவையில்லை. தங்களுக்கு ஏதாவது முறைப்பாடுகள் இருக்குமாயின் இருந்தால் போதனா வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருநாளைக்கு 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள கூடிய வசதிகள் காணப்படுகின்றன.

வைத்தியசாலையில் உள்ள இரண்டு இயந்திரங்களினை பயன்படுத்தி 7 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். காலையில் 8.00 மணிக்கு பரிசோதிக்கப்பட்டு இரவு 7.00 மணிக்கு முடிவுகளை வெளியிட கூடியவாறாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக எதிர்வரும் வாரம் யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இன்றைய நாள் வரை யாழ்.மாவட்டத்தில் சமூகத்தொற்றில்லை. எதிர்வரும் காலங்களில் நடைபெறுபவற்றை சரியாக எதிர்வு கூறமுடியாது. பொதுமக்கள் சரியான விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.