ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கட்டுவன் பிரதேச சபையை பார்வையிட்டார்.
கட்டுவனவில் உள்ள பிரதேச சபை பிரதான கட்டிடத்தின் குறைபாடுகள் காரணமாக சபையின் நாளாந்த சேவைகள் மித்தெனிய நகரில் உள்ள உப அலுவலக கட்டிடத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன.
இடவசதி போதாமையால் சபை கூட்டங்களின் போதும் சேவைகளை வழங்கும் போதும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி புதிய கட்டிடமொன்றை அமைத்துத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
மித்தெனிய குளத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ‘ரணவிரு உயன’ சிறுவர் விளையாட்டரங்கு மற்றும் நடை பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை என்பவற்றையும் ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார். சங்கைக்குரிய முருங்காகஸ்யாயே ஞானிஸ்ஸர நாயக்க தேரர் மன்றத்தினால் இதற்கான அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
மித்தெனிய பிரதேசத்தில் குடிநீர் பிரச்சனைக்கும் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கும் உடனடி தீர்வை வழங்குவதற்கும், மித்தெனிய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் மித்தெனிய பிரதேச சபையின் தலைவர் மஹீன் கமாச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.