கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குறித்த நடவடிக்கையின் போது சம்மாந்துறை நகரப்பகுதியில் கைத்தொலைபேசி விற்பனை செய்யும் கடை ஒன்றில் பணியாற்றிய இருவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை தொடர்ச்சியாக களவாடி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடை உரிமையாயார் இவ்விடயம் தொடர்பாக அறிந்து இன்று (06.11.2020) சம்மாந்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமரா காணொளியினை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முதலில் குறித்த கடையில் பணியாற்றிய சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பகுதியில் தொலைபேசிகளை வாங்கி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் கைதாகினர்.
இவ்வாறு கைதானவர்களை கொண்டு முன்னெடுக்கபட்ட மேலதிக விசாரணையின் போது பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைதாகினர்.
இதன்போது களவாடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளில் காரைதீவு பகுதியில் இருந்து 8 கைத்தொலைபேசிகளும் சாய்ந்தமருதில் இருந்து 10 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை குறித்த சம்பவத்தில் கைத்தொலைபேசிகளை களவாடியவர்கள் அதை வாங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட 8 சந்தேக நபர்களும் நாளை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கட்டளையின் படி அம்பாறை கல்முனை பிராந்திய பதில் உதவி காவல்துறை அத்தியட்சகரினதும், சம்மாந்துறை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியினதும் ஆலோசனையினூடாக சம்மாந்துறை காவல்துறை நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.