மட்டக்களப்பு பெரிய கல்லாறு வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு செயலணியின் அவசர செயற்பாட்டுக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டம் இன்று (07) மாவட்ட செயலகத்தில் அவசரமாகக் கூடி பல விசேட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைவாக மட்டக்களப்பில் அதியுச்ச பாதுகாப்பையும் சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மேலும் 4 கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகள் அவசரமாக தயார்படுத்தப்படுவதுடன், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுவருகிறது.

சுகாதார மற்றும் காவல்துறை, பாதுகாப்பு, நிருவாக பிரிவினரால் மேற்கொள்ளப்படும் அனைத்து கொரோனா தடுப்பு செயற்பாடுகளையும் முகாமைத்துவம் செய்து கண்காணிக்க மாவட்ட செயலகத்தில் கண்காணிப்பு நிலையம் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களை சுகாதார, பாதுகாப்பு, காவல்துறை பிரிவினர் தனித்தனியாக சென்று பார்வையிட்டு தகவல் திரட்டும் நடைமுறை ஒரே தடவையில் செல்லத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் கொரோணா மரணங்களை அம்பாறை அல்லது பொலனறுவையில் எரிப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொள்ள நெருங்கிய குடும்ப உறவினர்கள் ஐவர் மாத்திரம் அனுமதியளிக்கப்படும்.

இவ் விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.லதாகரன், மாவட்ட பிரதிகாவல்துறைமா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி கேணல் எஸ்.பீ.ஜீ. கமகே, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அட்சுதன், மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே. குணராஜசேகரம், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.