க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி -கல்வி அமைச்சர்!

gl peiris
gl peiris

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேற்றைய தினம் நிறைவடைந்தது.

இந்நிலையில், பரீட்சையின் முதல் நாளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 பரீட்சார்த்திகள் இருந்ததாகவும், மூன்று வாரங்களுக்குள் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட 27 பரீட்சார்த்திகள் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும் (ஐ.டி.எச்), பனாகொடை இராணுவ முகாமில் ஒரு பரீட்சார்த்தியும், மற்றொரு பரீட்சார்த்தி முல்லேரியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் போது அவர்கள் அனைவரும் பரீட்சைக்கு தோற்றினர் எனவும் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று வார பரீட்சையின் போது, தனிமைப்படுத்தப்பட்ட 568 பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்கு தோற்ற வசதிகள் அதிகாரிகளால் செய்துகொடுக்கப்பட்டன.

இந்நிலையில், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் விடைத்தாள்களை திருத்தும் பணி தொடர்பான முடிவை எடுக்க வேண்டும் எனவும், இரண்டு வார காலத்திற்குள் தேவையான முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.