வன்னியில் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம்’ தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிலையில், அங்கு இன்று (10.11) கொரோனா தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார, திறன் விருத்தி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்கள், வடக்கு மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், நகர மற்றும் பிரதேச சபை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வெளிமாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டமையாலும், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டமையாலும் அவர்களின் கலந்துரையாடல் இடம்பெற்ற கேட்போர் கூடம், விருந்தினர் மண்டபம் என்பன மாவட்ட செயலகத்தின் கோரிக்கைக்கமைவாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.