திருக்கோவில் பிரதேசசபையின் 33வது சபை அமர்வு இன்றைய தினம் (11) பிரதேசசபைத் தவிசாளர் ஆர்.டபிள்யூ.கமலராஜன் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை முன்வைப்பு அமர்வாகவும் இது இடம்பெற்றது.
சபைச்சம்பிரதாயங்களுடன், ஆரம்பிக்கப்பட்ட அமர்வில் சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை பிரதேச சபைத்தவிசாளரினால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதன் போது எவ்வித எதிர்ப்புகளுமின்றி வரவு செலவு அறிக்கை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேற்படி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஏழு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் இரு உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் என மொத்தமாக 16உறுப்பினர்கள் ஏகமனதான ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சபை அமர்வின் போது சபை நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக அம்பாறை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.