தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்படுவதை இலங்கை அரசு தடுக்கவேண்டும் – எஸ்.நிஷாந்தன்

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க எமது கௌரவ நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இச் செயற்பாட்டை இலங்கை அரசு மனித நேயத்துடன் அணுகித் தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழ்தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை (11) தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதன்மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மட்டும் அல்ல அவர்களது மிகப்பெரிய தொழில் மூலதனத்தையும் பாதிக்கும் இந்த நடவடிக்கையை மனிதாபிமான முறையில் இலங்கை அரசு கையாளவேண்டுமே தவிர அநீதியான முறையில் தேவையற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது.

தமிழக மீனவர்கள் தங்களது கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைதுசெய்தும் அவர்களின் படகுகளை பறிமுதல்செய்தும் நீதிமன்றங்கபளூடாக சட்டநடவடிக்கை எடுத்து சிறைகளில் அடைக்கப்படுகின்றார்கள். அதன் பின்னர் பல மாதங்களுக்குப்பிறகு தண்டனை காலத்தை நிறைவு செய்தபின் கௌரவ நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றார்கள்.

இந் நிலையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களுடைய படகுகள் பெரும்பாலும் விடுவிக்கப்படுதில்லை அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் தான் இப்போது அழிக்கப்படவுள்ளன.

இலங்கையின் கௌரவ நீதிமன்றங்களின் இந்த நடவடிக்கைகள் இரு நாட்டு உறவுகளிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. இப்போது அழிக்க உத்தரவிடப்பட்டுள்ள படகுகள் முடிவடைந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவையாக இருந்தாலும் அவை முடிவடைந்த வழக்குகளிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டவைதான். இப்படியிருக்கும் போது அவற்றை அழிக்க கௌரவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது மிகுந்த துயரத்தை தருகிறது

எனவே, இலங்கை அரசு இப் பிரச்சனையை மனிதாபிமான முறையில் கையாண்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வங்கக்கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 2014ஆம் ஆண்டுவரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகள் அந்த ஆண்டின் இறுதியில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன்பின் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும், 37 படகுகள் மன்னார் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தன. இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அப்படகுகளை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதியில் சம்மந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனுமதி வழங்கின.

அதன்படி கடந்த ஆண்டு இலங்கை வந்த தமிழக மீனவர்கள் 10 படகுகளை மட்டும் மீட்டுவந்தனர். மீதமுள்ள படகுகளை சீரமைக்க வேண்டியிருந்ததால் அதற்கான பணியாளர்களை அழைத்து செல்ல சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் அடுத்தடுத்து பல சிக்கல்களும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலும் ஏற்பட்டதால் இங்கு வந்து படகுகளை மீட்டு எடுத்துக்கொண்டு செல்ல அவர்களால் முடியவில்லை.

இலங்கை அரசும் மதிப்புக்குரிய நீதிமன்றமும் மேலும் ஒரு சில மாதங்கள் கால அவகாசம் கொடுத்து, அதற்குள்ளாக 121 படகுகளையும் எடுத்துச் செல்லும்படி உத்தரவிட வேண்டும். மேலும் இலங்கையின் மதிப்பிற்குரிய நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து படகுகளை அழிக்க ஆணையிட்டிருப்பது தான் தமிழக மீனவ உறவுகள் தரப்பில் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு படகின் மதிப்பும் பல கோடிகள் இருக்கும். அந்த படகுகளை அழிப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மூலதனத்தையும் முற்றிலுமாக அழித்துவிடும். தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப்பட்டால் மேலும் எமது கடல் பகுதி மாசு அடையவே வழி வகுக்கும் 121 படகுகளையும் தமிழக மீனவ உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தான் மிகவும் எளிமையான தீர்வு ஆகும்.

எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து படகுகளையும் சீரமைத்து எடுத்துச் செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கவேண்டும் என இலங்கை அரசிடமும் சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களிடமும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கேட்டுக்கொள்கின்றது.