கொரோனாவால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கிறார்கள் என்பது உண்மையல்ல -ஜயருவான் பண்டார

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கின்றார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனாவால் மக்கள் வீதியில் விழுந்து கிடப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்கள் பகிரப்படுகின்றன. நாட்டில் தற்போது கொரோனாத் தொற்றால்தான் உயிரிழக்கின்றார்களா? என்பது பரிசோதனைகளின் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதய நோய் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட வீதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கக் கூடும். இவ்வாறு உயிரிழப்பவர்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடையும் வரை கொரோனாத் தொற்று என்று கூற முடியாது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படுவது அபாயமான நிலைமையாகும். இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார் .