ரிசாட் பதியுதீனின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது- மேன்முறையீட்டு நீதிமன்றம்

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் முழுப் பகுதியையும் மறுகட்டமைக்க தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தவும் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான நிலையம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வன பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

வில்பத்து சரணாலயத்தின் கல்லாறு வனப்பகுதியில் 2388 ஏக்கரை அழித்ததன் ஊடாக பாரிய சூழல் அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வனப்பகுதியை மேலும் அழித்து மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற குடியேற்றங்களைத் தடுப்பதற்கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் நீதிக்கான நிலையம் மனுவை தாக்கல் செய்திருந்தது.