கொரோனா சடலங்களை புதைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சரவையால் எடுக்க இயலாது – கெஹேலிய ரம்புக்வெல

83976
83976

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை  புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது. இவ்விடயம் தொடர்பில் சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்த தயாராக உள்ளோம் என அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என கடந்த வாரம் தவறான செய்தி  சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பிலும், இறப்பவர்களின் மத உரிமைகள் தொடர்பிலும் அமைச்சரவையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம் பெற்றன. இவ்விடயம் முஸ்லிம் சமூகத்தினரை அடிப்படையாக கொண்டு அமையவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது குறித்து எழுந்துள்ள  வாதங்கள் தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை  சுகாதார குழுவினருக்கு வழங்கவே கடந்த வாரம்   இடம் பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது .

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் முதலாவதாக  இறந்தவரின் உடலை தகனம் செய்வது, அல்லது புதைப்பதா என்ற விடயம் சுகாதார தரப்பினரால் அதிகம் ஆராயப்பட்டது. நாடுகளின் பௌதீக காரணகளுக்கு அமைய நாடுகள் தீர்மானம் எடுக்க முடியும் என உலக சுகாதார தகனம் குறிப்பட்டதற்கு அமைய இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய  தீர்மானிக்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இறக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் மாறுபட்ட கருத்தினை தெரிவித்தார்கள்.

நடைமுறையில் உள்ள சட்டம், சுகாதார அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடலை உலர்வலய பிரதேசத்தில் புதைக்க முடியுமா என்ற யோசனை மாத்திரம் முன்வைக்கப்பட்டது.

நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை கொவிட்-19 வைரஸ் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் சுகாதார குழுவினரின் பரிசீலனைக்கு வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியது. என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது,புதைப்பதா என்று தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது. இவ்விடயம் குறித்து சுகாதார தரப்பினரே தீர்மானம் எடுப்பார்கள் என்றார்.