ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்! சந்தேக நபர்கள் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

download 30
download 30

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோத  காடழிப்பு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் மீது மரக்கடத்தல் காரர்களால் 12-10.2020 தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்  காயமடைந்த ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்ததோடு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்தது .

இந்நிலையில் முதலாம் இரண்டாம் சந்தேக நபர்கள் ஏற்கனவே பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள்  17.11.2020 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில்   எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று சந்தேக நபர்களுக்கும் கடும் நிபந்தனையில் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்க  மன்று உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ் .தனஞ்சயன் க.பார்த்தீபன்  சி.துஸ்ஜந்தி உள்ளிட்ட சட்டவாளர்கள் முன்னிலையாகியிருந்தனர் 

வழக்கு விசாரணையின் போது காவற்துறையினர் மற்றும் வன வளத்திணைக்களம் சார்பில் மேலதிக அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த வழக்கில் நான்காம்,ஜந்தாம் சந்தேக நபர்களுக்கு அடையாள அணிவகுப்பு  தேவைப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த அன்று அவர்கள் அங்கு இருந்ததை உறுதிப்படுத்தி ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதன் அடிப்படையிலும் கொரோனா  வைரஸ் தொற்று நிலைமைகள்  காரணமாகவும் சந்தேக நபர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் கௌரவ  நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

குறிப்பாக வழக்கின்  மூன்றாம் நான்காம் ஐந்தாம் சந்தேக நபர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கவும் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் ஒப்பமிடுமாறும் பணித்துள்ளதோடு வழக்குதொடுனர்  சாட்ச்சியாளர்களுக்கான எந்த அச்சுறுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கையும் செய்து விடுவித்திருந்தார்.

தொடர்ச்சியாக இந்தவழக்கு விசாரணையினை மேற்கொள்ளவதற்குகாவற்துறையினர் வனவளத்திணைக்களத்தினரும் சரியான விதத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மன்று கட்டளை பிறப்பித்துள்ளதுடன் இந்த வழக்கு விசாரணை 02.02.2021 அன்று திகதியிடப்பட்டுள்ளது.