அரசாங்கத்தை விமர்சனம் செய்த 30 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படுவதாகவும் இதுவரையில் அவ்வாறு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் அரசாங்கம் விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும் எவரையும் கைது செய்தது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வெளியிட்ட கருத்து குறித்தும் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது ஓர் ஜனநாயக நாடு எனவும் கருத்துக்களை வெளியிடக்கூடிய சுதந்திரம் பூரணமாக இருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாவதாகவும் அதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பேருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்க பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.