நோர்வூட் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கை தயாரிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் ஏற்பட்ட அமளி துமளியையடுத்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
நோர்வூட் பிரதேசசபையின் டின்சின் மண்டபத்தில் சபைத்தலைவர் ரவி குழந்தைவேலுவின் தலைமையில் இன்று (19) நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே எதிரணி உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இன்றைய கூட்டத்தின் போது, நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பொகவந்தலாவை வட்டார உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினருமான சிவனேசன், கடந்த ஆண்டு பிரதேசசபையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திகள் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், வட்டார உறுப்பினர் என்ற வகையில் எனக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்போது குறுக்கிட்ட சபையின் உபதலைவர் தங்கராஜ் கிஷோகுமார், இது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சபை. உங்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதையடுத்து, கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் எதிரணி உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.