மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றி பின்னர் அறிவிப்பேன்-வடமாகாண முன்னாள் முதலமைச்சர்!

01 7 4
01 7 4

வரும் ஆண்டு மார்ச் மாதம் வரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் நான் கலந்துகொள்வது பற்றி பின்னர் அறிவிப்பேன் என முன்னாள் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று(19) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டதன் பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் வழங்கையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்தார்

அந்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியும் அதற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி விக்னேஸ்வரன் வழங்கிய பதிலின் முழு வடிவமும் வருமாறு

கேள்வி :- 2021 மார்ச் மாதம் வரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா? அதற்கான ஆயத்தங்கள் ஏதும் செய்துள்ளீர்களா?

பதில் :- தற்போதைய கொரோனா காலத்தில் திட்டமிடுவதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் சற்றுக் கடினமாகவே இருக்கின்றன. நான் கலந்துகொள்வது பற்றி பின்னர் அறிவிப்பேன். எனினும் நாங்கள் இது பற்றி தற்போது நினைத்திருப்பதைப் பற்றிக் கூறுகின்றேன்.


நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள்.

ஐக்கிய நாடுகள் அலுவலர்களைச் சந்திப்பார்கள். சர்வதேச நிறுவன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சந்தித்து ஏன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.


அத்துடன் அவர்களுடன் சேர்ந்து ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி பேச வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. அதாவது யுத்த குற்ற சான்றுகளைச் சேகரித்து பாதுகாப்பாக சேமித்து வைத்தல், எந்த வகையில் குற்றம் புரிந்த இலங்கையின் அரசியல் தலைவர்களையும், யுத்த கால படையணித் தலைவர்களையும் சர்வதேச நீதித்துறைப் பொறிமுறைகளுக்குள் கொண்டு செல்வது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது போகப் போக விபரங்களை நான் தருவேன் எனவும் அவர் பதில் வழங்கியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.