புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிணற்று நீர் கறுப்பாக மாறிய சம்பவம் தொடர்பில் இதுவரை உரிய அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனபிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் வேணாவில் பகுதியில் கிணறு ஒன்றின் நீர் நேற்று(20) காலை திடீரென கறுப்பு நிறமாக மாறி இருந்தமையை காலையில் அவதானித்த உரிமையாளர் குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தபோதும் குறித்த நீரை பரிசோதனை செய்வதற்கு உரிய அதிகாரிகள் விடுமுறையில் இருக்கின்ற காரணத்தினால் இதுவரை அந்த செயல்பாடு முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறித்த கிணற்றில் உள்ள நீரை வீட்டு உரிமையாளரை எடுத்து வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருப்பதாவும் இதனால் குறித்த நீர் என்ன காரணத்திற்காக மாறியது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காணப்படுகின்றது.
திடீரென நீர் கறுப்பு நிறமாக மாறியதால் அச்சமடைந்துள்ள மக்கள் குறித்த விடயம் தொடர்பில் எதற்காக நிறம் மாறியது என்பது தொடர்பாக தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக முற்படுகின்ற போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளது விரைவான செயற்பாடுகள் இன்மை காரணமாக குறித்த நீர் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.